/indian-express-tamil/media/media_files/2025/10/08/orange-alert-rain-2025-10-08-07-30-41.jpg)
வங்கக் கடல் சுழற்சி எதிரொலி: ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு- இன்றும் நாளையும் எங்கெல்லாம் கனமழை?
தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் உள்ள மற்றொரு சுழற்சியும் காரணமாக, தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை காரணிகள்:
அரபிக் கடலில் இருந்த 'சக்தி' புயல் நேற்று வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு உள்ளது. அத்துடன், தென்னிந்திய பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தும், மற்ற இடங்களில் இயல்பை ஒட்டியும் வெப்பநிலை இருந்தது.
இன்று மற்றும் வரும் நாட்களில் மழை வாய்ப்பு:
இன்று (அக்டோபர் 8): கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நாளை (அக்டோபர் 9): கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும்.
ஆரஞ்சு அலர்ட்: இந்த மழை நீடிப்பு அக்டோபர் 12 வரை நீடிக்கும் என்பதால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், இயல்பிலிருந்து சற்று குறைந்தும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று காலை 9.30 மணி வரை திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.