கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் அதிகரித்து இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த சூழலில் கோவையில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக, அவிநாசி சாலை, காந்திபுரம், உக்கடம், டவுன் ஹால், சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்ன வேடம்பட்டி, சிவானந்தா காலனி, மணியக்காரன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
அதிலும், சுந்தராபுரம், ஈச்சனாரி இடங்களில் கனமழை பெய்தது. இது தவிர சூலூர், பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, எட்டிமடை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.