தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று டிசம்பர் 14-ம் தேதி நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்தமிழகத்தில் நேற்று (13.12.2024) அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்காசி,செங்கோட்டை, இலஞ்சி, குற்றாலம், சங்கரன்கோவில் உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், டிசம்பர் 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
அதே போல, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று டிசம்பர் 14-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 14) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை (14.12.24) சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல, தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (டிசம்பர் 14) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல, கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (டிசம்பர் 14) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (டிசம்பர் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்சி, விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் பள்ளிகள் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் மற்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு மாற்று தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.