தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெற்றதால், அதைச் சுற்றியுள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. மேலும், கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதுகாப்பு கருதி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன மழையின் காரணமாக இன்று (14.03.2018) தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, வழக்கம்போல நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்கள், வழக்கம்போல தேர்வு மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.