Thirunelveli | tuticorin | kanniyakumari: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அப்போது, “எல்லா பகுதிகளில் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம். சூலூரில் இருந்து உணவுப் பொட்டலங்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
/indian-express-tamil/media/post_attachments/451a690c-b3f.jpg)
இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளன. பொட்டல் பகுதியில் குளம் உடைப்பு காரணமாக அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு இருக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து பொதுமக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மாடி வீடுகளில் தற்காப்பாக இருப்பவர்களை மீட்பதற்காக ராமநாதபுரத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் வருகை தந்துள்ளது.
மேலும், தென் மாவட்டங்களில் மீட்பு பணியில் 3 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டரை களமிறக்கியுள்ளது கடலோர காவல் படை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஹெலிகாப்டர் பறப்பதற்கான சாதகமான சூழல் இன்னும் அமையவில்லை.' என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“