நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது;
நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிக தீவிர கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி மற்றும் மாஞ்சோலை மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
From Today for next 4 days it is going to be massive day ahead for Niligirs, Valparai with extreme rains and heavy rains...
Posted by Tamil Nadu Weatherman on Saturday, June 14, 2025
கேரளா, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், கர்நாடகாவின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும், பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் பள்ளத்தாக்கு மற்றும் முக்கூர்த்தி அணைப் பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் 200 மி.மீ. முதல் 300 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சென்னையில் வித்தியாசமான மழைப்பொழிவு
சென்னையைப் பொறுத்தவரை, தற்போதைய காற்றின் சுழற்சி காரணமாக சில இடங்களில் வேகமாக நகரும் மேகங்களால் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசைக் காற்றுகள் மிகவும் வலிமையாக இருப்பதால், மேகங்கள் உயர எழுந்து பெரிய மேகமூட்டமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை.
தென் சென்னையில் பல மழைப் பொழிவுகளை தவறவிட்டுள்ளது. மீனம்ப்பக்கம் போன்ற தென் சென்னை பகுதிகளில் ஜூன் மாதத்தில் 10 மி.மீ மழையைக்கூட கடக்கவில்லை. அதேசமயம், ஆம்பத்தூர், அண்ணா நகர், பெரம்பூர், மணலி போன்ற வட மற்றும் வட மத்திய சென்னை பகுதிகளில் பல இடங்களில் 150 மி.மீ-க்கு மேல் மழை பதிவாகி ஜூன் மாதத்தில் ஒரு கனவு போன்ற மழைப் பொழிவை கண்டுள்ளன. இது ஒரு விசித்திரமான மழைப் பொழிவாக பார்க்கப்படுகிறது.