கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, தேனி , மதுரை, சிவகங்கை, சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) மொத்தம் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்திருந்தது.
மேலும், நவம்பர் 4-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, தேனி , மதுரை, சிவகங்கை, சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“