கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து விடியவிடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழையின் காரணமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருப்பராயன் கோவில், தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேவனாபுரம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாலங்களை தொட்டவாறு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.
இதே போல் காரமடை சாஸ்திரி நகர் பகுதியில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் செல்வதால் காரமடை சிறுமுகை சாலையில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கரைபுரண்டு ஓடிவரும் வெள்ளத்தினை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மேலும் கனமழை காரணமாக கோவை மாவட்டத்துக்கு விடுமுறை ஏதும் அறிவிக்கப்படாத காரணத்தால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“