ஹெல்மெட் போடாத இளைஞரை கட்டிவைத்து அடித்த வழக்கில் காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்க காவல்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவு.
சென்னை தியாகராயநகர் பகுதியில் கடந்த 2-ம் தேதி ஹெல்மெட் அணியாமல் தாயார் சங்கீதா, சகோதரி ரேவதி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பிரகாஷ் என்பவரை மாம்பலம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுரேஷ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட காவலர்கள் தாக்கினர்.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், போலீஸ் அதிகாரிகள் சுரேஷ், ஜெயராமன் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்தநிலையில் அந்த வழக்கு இன்று நீதிபதி டி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் அதிகாரிகள் இருவரும் ஆஜராகினர்.
வாலிபர் பிரகாஷ் சம்பவத்தன்று நடந்ததை புகார் மனுவாக நீதிபதியிடம் அளித்தார். சம்பவத்தன்று அங்கு இருந்த பெண் சப் -இன்ஸ்பெக்டர் இந்துமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் பிரபு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலிபர் பிரகாஷ் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பிரபு, இந்துமதி, சுயம்புலிங்கம் ஆகியோர் அடுத்த மாதம் (மே) 15 ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வாலிபர் பிரகாசை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.