இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருவதால் அங்கு வசித்து வந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இந்த சூழலில் அங்குள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "இஸ்ரேல் ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்த சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத் துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.
இதற்கென புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 011 24193300, 9289516712 (வாட்ஸ் ஆப்) மற்றும் tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com ஆகிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில், செயல்பட்டு வரும் கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளவும், தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.