அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மரணங்களை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்துவதில் உரிய முறையில் செயல்படுத்தவில்லை என கருத்து தெரிவித்தனர்.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என பிறப்பித்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
கட்டய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவை முறையாக அமல்படுத்த கோரிய வழக்கில் தீர்ப்பை நாளை (இன்று 20.09.2018) அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டனர். அதில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மரணங்களை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்தும் ஹெல்மெட்டை கட்டாயமாக்கி பிறப்பித்த அரசாணை குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் ஹெல்மெட்டை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணையையும் நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23 ஆம் தேதி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.