சென்னை மெரினா கடற்கரையை அசுத்தம் செய்பவர்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டதா என சென்னை மாநகராட்சியிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உலகின் மிக நீளமான கடற்கரையாக மதிப்பிடப்பட்ட மெரினா கடற்கரை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும், பெரும்பாலும் அசுத்தப்படுத்தப் படுவதாகவும், அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்றும் பொதுவாகக் கூறப்படுவதைக் கவனித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை அசுத்தம் செய்பவர்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டதா என சென்னை மாநகராட்சியிடம் தெரிந்துக் கொள்ள முயன்றது.
மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பான மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு நாளும் குவியும் பெரும் அளவிலான குப்பைகள் முறையாக வெளியேற்றப்படுகிறதா? எவ்வாறு அகற்றப்படுகிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
தமிழகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தளமான மெரினா கடற்கரையின் தூய்மை மற்றும் பராமரிப்பை கவனிக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவை அமைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவில், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வார்டு கவுன்சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக சேவகர், வணிகர்களின் பிரதிநிதி ஆகியோர் இடம் பெற வலியுறுத்தியுள்ளது.
மீன் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்புறச் சாலையை ஆக்கிரமிப்பதைத் தடுக்க மீன் விற்பனையாளர்களுக்கு உட்புறச் சாலையின் அருகே ஒரு மீன் சந்தை ஏன் வழங்கப்படக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கேட்டது.
ஜூலை 22 ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சியை பதிலளிக்க கோரிய, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான பெஞ்ச், கடற்கரைக்கு வருகை தரும் மக்களுக்கு, கழிப்பறைகள் எத்தனை உள்ளன? அண்ணா நினைவிடத்தில் இருந்து லைட் ஹவுஸ் வரை கடற்கரையில் பல்வேறு இடங்களில் மொபைல் கழிப்பறைகள் நிறுத்தப்பட்டுள்ளதா? என்ற விவரங்களை கோரியது. மேலும் மொபைல் கழிப்பறைகள் இல்லாவிட்டால், அவற்றை கிடைக்க செய்து, கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் அழகைக் கெடுப்பதைத் தவிர்க்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
எழுப்பப்பட்ட மற்ற கேள்விகளில், ஆண்டுதோறும் கடற்கரையை பராமரிப்பதற்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு?, விற்பனையாளர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதன் மூலம் வருமானம் ஈட்டப்படும் தொகை எவ்வளவு?, முறையான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? இரவு 10.00 மணிக்குப் பிறகும் பார்வையாளர்கள் கடற்கரையில் இருந்ததால் அவர்களுக்கு பாதுகாபு வழங்க பல்வேறு இடங்களில் போலீஸ் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளையும் உயர் நீதிமன்றம் கேட்டது.
மற்றொரு கேள்வியில், மெரினா கடற்கரையை பராமரிக்க அல்லது அதன் அழகை மேம்படுத்த சென்னை மாநகராட்சி எடுக்கும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றம் அறிய விரும்பியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil