New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/07/a170.jpg)
பலமுறை டிஜிட்டல் பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை?
சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமான உத்தரவுகள் காகித அளவிலேயே இருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்ப்பட்டில் ஜி.எஸ்.டி சாலை பகுதிகளில் அனுமதியின்றி, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ராட்சத விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் விதிமுறைகளை மீறி வைத்துள்ள பேனர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பலமுறை டிஜிட்டல் பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எண்ணமில்லையா என்றும், பல உத்தரவுகள் காகித அளவிலேயே உள்ளன என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
விதிமீறல் பேனர்களை அகற்றுவதாகவும், நடவடிக்கை எடுப்பதாகவும் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தாலும், உண்மை நிலை வேறு எனவும் அகற்றுவதாக தெரிவித்த பின்னர், அந்த இடத்திற்கு சென்று பார்த்தாலும் மீண்டும் அதே நிலையில் தான் பேனர்கள் உள்ளது என தெரிவித்தனர். உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றியே பேனர்கள் வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதே போல் விதிமீறல் பேனர்கள் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.