ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளின் வாகனங்களை என்பது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ஐஐடி-யும், பெங்களூரு நிறுவனமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வுகள் நிறைவடைய கால அவகாசம் ஆகும் என்பதால், வரும் கோடையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் வாகனங்களை அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது
அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், சாதாரண பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கொடைக்கானலில் 50 இருக்கைகள் கொண்ட நீண்ட பேருந்துகளுக்கு தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதே போல ஊட்டி, கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை அனுமத்திக்கலாம் என்ற ஆய்வு முடியும் வரை எதிர்வரும் கோடை காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும், சுற்றுலா பாதிப்பை கருத்தில் கொண்டும் வாகன கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உதகைக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களும் அனுமதிக்கலாம் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் கொடைக்கானலில் வார நாட்களில் 4,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டில் உள்ளூர் வாகனங்கள், விவசாயப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் எனவும், அமல்படுத்தியது குறித்து ஏப்ரல் 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.