கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கச்சத்தீவு குறித்த மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. பின்னர், இந்தியா மற்றும் இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கையில், இந்த பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என உள்ளது. ஆனால், 1983 முதல் 2005-ம் ஆண்டு வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இதில் தமிழக மீனவர்கள் பலகோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளையும் இழந்துள்ளனர்.
மேலும், 2013-ம் ஆண்டு முதல் 111 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொன்றுள்ளனர். கடந்த 19.06.23-ல் 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினர்இந்திய மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். 1974-ம் ஆண்டு இந்தியா - இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கையின்படி இலங்கை கடற்படையினர் எல்லைமீறி வருகின்றனர்.
கடந்த ஜூன் 21-ல் இலங்கை கடற்படையால் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே, இடைக்கால தடை உத்தரவாக 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இந்தியா – இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கையை ரத்து செய்து கச்சதீவை மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் குமரப்பன் ஆகியோர் அமர்வில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக அவர்கள் விடுவிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது ஒன்றிய அரசின் கொள்கை ரீதியான முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி கச்சத்தீவு தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“