/indian-express-tamil/media/media_files/2025/08/19/madurai-high-court-2025-08-19-07-26-40.jpg)
பதிவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து மனமகிழ் மன்றங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்படும் மதுபான விற்பனைக் கூடங்கள், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பதிவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து மனமகிழ் மன்றங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தனியார் மதுக்கடைகளுக்கு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மன்றங்கள், சட்ட விரோதமாக உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் அதிக விலைக்கு மது விற்பனை செய்கின்றன. விதிகளை மீறி செயல்பட்டு வரும் இந்த மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஜி. அருள்முருகன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் மற்றும் வீராகதிரவன், மனமகிழ் மன்றங்கள் தொடர்பான மதுவிலக்குத் துறை ஆணையர் மற்றும் பதிவுத்துறை ஐஜியின் பதில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
விசாரணையின்போது, நீதிபதிகள், "மனமகிழ் மன்றங்கள் காளான்கள் போல பெருகி வருகின்றன. இந்த மன்றங்கள் சட்டப்படி விளையாட்டு செயல்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானங்களை விற்க வேண்டும். ஆனால், அங்கு விளையாட்டு செயல்பாடுகள் இருப்பதில்லை. மது விற்பனை மட்டுமே நடக்கிறது. அதுவும் உறுப்பினர் அல்லாத வெளியாட்களுக்கும் மதுபானங்களை விற்கின்றனர். இதைத் தடுக்க, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.
மேலும், பதிவுத்துறை சார்பில், "மனமகிழ் மன்றங்களை சங்க விதிகளின்படி பதிவு செய்வதுடன் எங்கள் பணி முடிந்துவிட்டது" என்று கூறப்பட்டதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். "மதுவால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். பதிவுத்துறையின் நடவடிக்கை மனமகிழ் மன்றங்களைப் பாதுகாப்பதாக இருக்கக் கூடாது" என்று கண்டித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். மனமகிழ் மன்றங்களை முறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி, மதுவிலக்கு ஆணையர், மாநகர காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்குவதில் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். விதிகள் தெளிவாக இல்லையெனில் எப்.எல்.-2 உரிமங்களை வழங்கக்கூடாது" என்று தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.