கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய வழக்கில், நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்பிற்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில், 'கடந்த பல ஆண்டுகளாக ஆடல், பாடல் நிகழ்ச்சி திருவிழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு, பிரச்னை உள்ளிட்ட காரணங்களைக் காட்டி அனுமதி மறுக்கின்றனர். அனுமதி வழங்க வேண்டும்' என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, 'சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யப்படுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
மனுதாரர்கள், ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலரிடம், ரூ.25 ஆயிரத்தை செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரத்தைக் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும். இதனால், உங்கள் கிராமம் செழிப்பாக இருக்கும் எனக் கூறி மனுக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.