தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை ஊதியமாக பெற்ற 21.58 லட்சம் ரூபாயை நான்கு வாரங்களில் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வேல் துரை.
வேல்துரை வெற்ரி செல்லாது... பணத்தை திருப்பி தர வேண்டும்
அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரியும், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தோல்வி அடைந்த மனோஜ் பாண்டியன் 2006 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டதால், வேல்துரை வெற்றி செல்லாதது என 2011 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக வேல்துரை பெற்ற ஊதியம் 21லட்சத்து 58 ஆயிரம் ரூபாயையும், 201நாள் சட்டமன்ற பணியில் பங்கேற்றதற்கு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதித்தும் அதனை திருப்பி அளிக்க வேண்டும் என சட்டமன்ற செயலாளர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார். சட்டப்பேரவை செயலாளர் உத்தரவை எதிர்த்து வேல்துரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். விசாரணையின் போது, அரசு ஊழியர் ஏதேனும் குற்றம் புரிந்து பணியிலிருந்து நீக்கப்பட்டால், அதுவரை அவர் பெற்ற சம்பளம் திரும்பி பெறப்பட மாட்டாது. அதேபோல், அரசு ஊழியர் என்ற அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தன்னிடம் ஊதியத்தை திருப்பி செலுத்தக் கோர முடியாது என வேல் துரை தரப்பில் வாதிடப்பட்டது.
எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால், எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை இழந்துவிட்ட மனுதாரர், ஐந்து ஆண்டுகள் பெற்ற ஊதியத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அரசு ஊழியர்களுடன், மனுதாரர் தன்னை ஒப்பிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிபதி, பார்த்திபன், வாழ்வாதாரத்துக்காக சம்பளம் வாங்குகின்ற அரசு ஊழியரையும், மக்களுக்கு சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வையும் ஒரே மாதிரியாக கருத முடியாது என தெளிவுபடுத்தினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேல் துரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே செல்லாது என நிரூபிக்கப்பட்டு விட்டதால், வேல்துரை தானாக முன்வந்து ஊதியத்தை திரும்பி அளித்திருக்க வேண்டும். எனக் அவர் பெற்ற ஊதியம் 21.58 லட்சம் ரூபாயை நான்கு வாரங்களில் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வேல்துரையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.