சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்தது. அரசு உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து கனசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாகவும், அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகாரளிக்கப்பட்டது
அதனடிப்படையில் பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு தீட்சிதர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கோபி, வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து தீட்சிதர்கள் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தரை, சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட எட்டுபேர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கையும் நீதிபதி ரத்து செய்ய முடியாது என மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.