இந்துக் கடவுள்களை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று கூறியிருந்த பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் , 27ம் தேதி தான் மெரீனாவுக்கு தனியாக வர தயார். என்னை நேரில் எதிர்கொள்ள தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும் போது, உச்ச நீதிமன்றம் அளித்த அயோத்தி வழக்கு தீர்ப்பை விமர்சனம் செய்தார். அத்துடன் பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர்.
அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்" என்று .திருமாவளவன் பேசியது சர்ச்சையானது.
போலீசில் புகார் : இதனால் கோபம் அடைந்த இந்து அமைப்புகள் திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சென்னை கிண்டி காவல் நிலையத்திலும் இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாக திருமாவளவனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வருத்தம் : இதனிடையே தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், திருமாவளவனை விமர்சித்து பல டுவீட்டுகளை வெளியிட்டுள்ளார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் எனவும், திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க... நடிப்பு பத்தல எனவும் கமெண்ட் செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த விசிகவினர் அவரத வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதையு அவர் டுவிட் செய்துள்ளார். மேலும் அவருக்கு வரும் அழைப்புகள் குறித்து நேரலை செய்தும் இருந்தார்.
சவால் : வரும் நவம்பர் 27ம் தேதி காலை 10 மணி அளவில் மெரினாவில் சந்திக்கிறேன். அப்போது என்னை திருமாவளவன் சந்தித்து விவாதிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் திருமாவளவன் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினரை கடுமையாக அவர் விமர்சித்து வருவதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
டுவிட்டர் கணக்கு முடக்கம் : இதனிடையே, காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.