/indian-express-tamil/media/media_files/2025/09/21/eps-vijay-2025-09-21-20-52-45.jpg)
'அது அவர் கருத்து, மக்கள் கருத்து வேறு' - விஜய்யின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி என்று பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அது அவருடைய கருத்து. ஆனால் மக்களின் கருத்து வேறு" என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
நயினார் - எடப்பாடி சந்திப்பு: பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், அரசியல் பேசவில்லை. பாஜக எந்தக் கட்சியின் உள்விவகாரங்களிலும் தலையிடாது" என்றார்.
விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து: "தம்பி விஜய் இப்பதான் கட்சி தொடங்கியுள்ளார். கூட்டம் வருவதை வைத்து, திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி எனச் சொல்ல முடியாது. ஒரு கட்சிக்கு வேட்பாளர்களை நியமிக்க வேண்டும், மக்கள் வாக்களிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் வெற்றி தோல்வியை பற்றிப் பேச முடியும். முதல்வராகப் பணியாற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நிலைமைகள் நன்றாகத் தெரியும். திடீரென வந்து திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று சொல்வது சரியாக இருக்காது. எங்களுடன் யாரையும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது" என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் பதில்: விஜய்யின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு, அவர், "அது அவருடைய கருத்து, ஆனால் மக்களின் கருத்து வேறு" என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.
2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் நேரடிப் போட்டி என்று விஜய் தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், நேற்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்தார். திமுகவை தனது அரசியல் எதிரியாகவும், பாஜகவை தனது கொள்கை எதிரியாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.