History of Bhavanisagar dam : தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்று அழைக்கப்படும் ஈரோடு பவானி சாகர் அணையின் வயது இன்றுடன் 66. ரூ. பத்தரை கோடி நிதியில் 1955ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். 105 அடி வரை நீர் தேக்கி வைக்கப்படும். 19 மதகுகளை கொண்டுள்ள இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகிறனர்.
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு கட்டுமானத்திற்கு வந்த மிகப்பெரிய பாசனதிட்டமாக அடையாளம் காணப்படுகிறது பவானிசாகர் நீர் தேக்கம். 1948ம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து 7 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்தது. அன்றைய முதல்வர் காமராஜர் இந்த அணையை திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் சத்தியமங்கலத்தில் பவானி ஆறும், மாயாறும் கலக்கும் இடத்தில் இந்த அணை கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகவும் நீளமான அணையாக கருதப்படும் பவானிசாகரில் 32.8 டி.எம்.சி வரை நீர் தேக்கி வைக்கலாம். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுரமைல்கள் ஆகும். நீலகிரி மலைத்தொடர்கள் தான் பவானி சாகரின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இந்த அனையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் போன்ற பகுதிகளில் இருக்கும் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது. கோபி, பவானி மற்றும் புளியம்பட்டி நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றுகிறது இந்த அணை.
முழுக்க முழுக்க தமிழர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் பொறியாளர்களால் இந்த அணை கட்டப்பட்டது. மண்ணனை, கல்லணை என்று 8.78 கி.மீ நீளம் கொண்டிருக்கும் இந்த அணையின் கட்டிடப்பணிகளை நேருவே நேரில் வந்து மேற்பார்வையிட்டிருக்கிறார். கடந்த 65 ஆண்டுகளில் 102 அடி உயரத்தை 20 முறை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மூன்று முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.