/indian-express-tamil/media/media_files/2024/10/18/5E1EiyEuh2C7Bzk3kzhs.jpg)
ஒகேனக்கலில் குளிக்கத் தடை: ஒகேனக்கலில் காலையில் நீர்வரத்து வினாடிக்கு 70,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 78,000 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 3ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Jun 27, 2025 21:25 IST
விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி விவசாயி நாகராஜை கத்தியால் குத்திய போலி சாமியார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். -
Jun 27, 2025 20:41 IST
மதுரையில் ஜூலை 5-ல் அகில இந்திய நாய்கள் கண்காட்சி
மதுரை தமுக்கம் மைதானத்தில் கெனி கிளப் சார்பில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூலை 5 (சனி) மற்றும் 6 -ம் (ஞாயிறு) தேதிகளில் காலை 10 முதல் மாலை 7 மணி வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், செல்லப்பிராணி வளர்ப்போர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
Jun 27, 2025 20:40 IST
வளத்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
விழுப்புரம் மாவட்டம் வளத்தி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கணக்கில் வராத ரூ.2.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு சார்பதிவாளார் முருகன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jun 27, 2025 20:24 IST
திமுக பிரமுகர் கொலை வழக்கு- 3 பேரை பிடித்து விசாரணை
தேனியில் தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக திமுக பிரமுகரை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jun 27, 2025 20:05 IST
வால்பாறையில் திடீர் மண்சரிவு: தேசிய பேரிடர் மீட்புகுழு ஆய்வு
கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.பல இடங்களில் கனமழை காரணமாக நேற்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மண் மற்றும் பாறை சாலையில் விழுந்துள்ளன. சம்பவம் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட 3 வீடுகளில் வசித்தவர்களை அப்புறப்படுத்தி, உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
Jun 27, 2025 19:58 IST
வார இறுதி நாட்கள்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக ஜூன் 27( வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் , ஜூன் 28 சனிக்கிழமை மற்றும் ஜூன் 29 ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பக்கத்திலிருந்து , திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27, 28ம் தேதிகளில் 505 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
-
Jun 27, 2025 19:39 IST
ஆட்டோ மோதி சிறுமி உயிரிழந்த வழக்கில் இருவர் கைது
கோவை கெம்பட்டி காலணியில் சரக்கு ஆட்டோ மோதி சிறுமி சவுமியா (15) உயிரிழந்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஓட்ட தெரியாமல் வாகனத்தை இயக்கிய கண்ணன், அவருக்கு ஓட்டத் தெரியாது எனத் தெரிந்தும் வாகனத்தை கொடுத்து அருகே அமர்ந்து பயணித்த ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jun 27, 2025 19:37 IST
அம்மாப்பேட்டை சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை சுங்கச் சாவடியில் மறு உத்தரவு வரும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. குறிப்பிட்ட அந்த வழித்தடத்தை சுங்கச் சாலையாக மாற்றுவது தேவையற்றது, எந்த நன்மையும் இல்லை என தொடரப்பட்ட வழக்கில், ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jun 27, 2025 19:19 IST
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக அதிகரித்து உள்ளது. கடந்த 5 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Jun 27, 2025 19:11 IST
வன எல்லையில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சம்
கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் வன எல்லையில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வன எல்லைகளில் உலாவும் சிறுத்தைகள் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது அப்பகுதியில் அதிகரித்துள்ளது.
-
Jun 27, 2025 18:31 IST
சிதம்பரம்: இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற தந்தை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் அபிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வீட்டில் இருந்த அபிதாவை அவரது தந்தை அர்ஜுனன் இன்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் இளம்பெண் அபிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். தலைமறைவான அர்ஜுனனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Jun 27, 2025 17:49 IST
புதுச்சேரி அமைச்சர் ராஜினாமா
புதுச்சேரியில் அமைச்சர்களை மாற்ற பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா செய்தார்
-
Jun 27, 2025 17:15 IST
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்- டி.டி.வி தினகரன்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்ததாவது; தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமித்ஷா பல முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் விஜய் கூட்டணியில் இணைவது குறித்து தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார் காத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். உறுதியாக கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான் என நான் நம்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து திமுக கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள்.
-
Jun 27, 2025 16:59 IST
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 60,740 கன அடி நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 60,740 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 22,500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது
அணையின் நீர் மட்டம் 114.74 அடியாகவும், நீர் இருப்பு 85.32 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
-
Jun 27, 2025 16:20 IST
கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு
கோவை மாநகராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் பேச முயன்ற போது வரிசைப்படி பேச அனுமதிக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு
யர் இருக்கை அருகே வந்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் வாக்குவாதம், வெளிநடப்பு
-
Jun 27, 2025 16:20 IST
கோட்டாட்சியர் என ஏமாற்றி திருமணம்: பெண் கைது
நாமக்கல் அருகே கோட்டாட்சியர் என ஏமாற்றி தன்னை திருமணம் செய்ததாக வங்கி அதிகாரி அளித்த புகாரில் பெண் கைது
அடையாள அட்டை, பணி நியமன ஆணையை சென்னையில் ஒருவர் தங்களிடம் வழங்கியதாக கைதான பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் கூறியதால் தீவிர விசாரணை
-
Jun 27, 2025 16:09 IST
நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா - சாதிய அடையாளங்களுடன் டிஷர்ட், கொடி ஆகியவை இல்லாத வகையில் அமைதியாக நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
-
Jun 27, 2025 15:37 IST
கோவிலில் முதல் மரியாதை நடைமுறையை நிறுத்த வேண்டும்: நீதிமன்றம் அறிவுறுத்தல்
பல கோவில் விழாக்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட காரணமே முதல் மரியாதை தான். கோவில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சி.
ஈரோடு பந்தீஸ்வரர் கோவில் மகா பெரிய குண்டம் விழாவில் முதல் மரியாதை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
-
Jun 27, 2025 15:32 IST
வாங்கிய பணத்தை திரும்பத் தராத நபர் கடத்தல் - 4 பேர் கைது
மதுரையில் முரளி மணிகண்டன் என்பவர் ஆன்லைன் ட்ரேடிங் செய்வதற்கு திருச்சியைச் சேர்ந்த சசி, சிவா ஆகியோரிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
பணத்தை திரும்பத் தராததால், பழைய விளாங்குடியில் இருந்த முரளி மணிகண்டனை, சசி, சிவா உள்ளிட்ட நான்குபேர் கடத்திச் சென்றதாக போலீசில் குடும்பத்தினர் புகாரளிக்க, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
Jun 27, 2025 14:30 IST
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக லி.மதுபாலன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சமீபத்தில் தமிழக அரசு 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (27.06.2025) ஆணையராக அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
-
Jun 27, 2025 14:29 IST
கோவை மாநகராட்சி கூட்டம் - அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கோவை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது முதலில் தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் !!!
பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு டேக்ஸ் உள்ளிட்டவை அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும்,
கடந்த 14 வருடங்களாக உள் விளையாட்டு அரங்கங்களை,
மாநகராட்சி குழந்தைகள், இளைஞர்கள் போன்றவர்கள் இலவசமாக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு 45 ரூபாய் குழந்தைகளிடம் மற்றும் இளைஞர்களிடம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தின் மையத்தில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. -
Jun 27, 2025 14:01 IST
2 நாள்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 27, 2025 13:16 IST
மாணவர்கள் படிகளில் தொங்கினால் நடவடிக்கை எடுக்கலாம்: மதுரை உயர்நீதிமன்றம்
மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனிப் பேருந்துகளை இயக்கக் கோரிய வழக்கில், பயணத்தின் போது மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதி படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
-
Jun 27, 2025 12:35 IST
குழந்தையைக் கொன்று விட்டு தாய் தற்கொலை
கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை; கணவன் கவின் பிரசாத் வீட்டில் இல்லாத நேரத்தில் ஒன்றரை வயது மகனைக் கொன்றுவிட்டு அமராவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jun 27, 2025 12:29 IST
காஷ்மீர் மாணவர் தாடியை எடுக்க நிர்பந்தப்பட்டதாக புகார்
KMCH மருத்துவக்கல்லூரியில் கிளீன் சேவ் என்ற பாலிசி இருக்கிறது; அதன்படி மாணவரிடம், தாடியை ட்ரிம் செய்ய அறிவுறுத்தினோம்; அவர் உடன்படவில்லை; மருத்துவக்கல்லூரியில் நாங்கள் சேர்க்கையை மறுக்கவில்லை" தாடி வைத்திருந்ததால் சேர்க்கை மறுத்ததாக தேசிய மருத்துவ ஆணையத்தில் காஷ்மீர் மாணவர் புகார் கூறிய நிலையில் கோவை கே.எம்.சி.எச் நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
-
Jun 27, 2025 12:25 IST
படிக்கட்டில் பயணித்தால் நடவடிக்கை - நீதிபதி எச்சரிக்கை
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும் - நீதிபதிகள். கூட்ட நெரிசலான இடங்களில் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் செல்லும் வகையில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
-
Jun 27, 2025 11:54 IST
காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் - திறந்து வைத்த ஸ்டாலின்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11.15 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் 2.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10,000/-, கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகளை வழங்கினார்.
-
Jun 27, 2025 11:26 IST
சாம்பாரில் பல்லி - மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
திருப்பூர்-தாராபுரம், கொழிஞ்சிவாடி அரசு பள்ளியில் சாம்பாரில் பல்லி விழுந்ததால் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்கள் வாந்தி, மயக்கம் அடைந்துள்ளனர். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நகர் மன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
Jun 27, 2025 11:21 IST
நிதி கிடைத்ததும் பிளவுக்கல் பெரியார் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகள் - விருதுநகர் ஆட்சியர் தகவல்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கூமாபட்டி கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலேயே எந்த காலத்திலும் பச்சைப்பசேல் என காணப்படும் ஒரே ஊர் வத்திராயிருப்புதான். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் அழகான கிராமம் கூமாபட்டி ஆகும். இது வத்திராயிருப்புவில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. பிளவக்கல், பெரியாறு அணை இயற்கையோடு இணைந்த மிக அழகான இடம்.கூமாபட்டிக்கு அருகில் அமைந்துள்ள இந்த அணை மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Jun 27, 2025 11:10 IST
மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி இழப்பு - ஆணையாளரின் விசாரணையில் அம்பலம்
மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணையாளரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதும், சில மாமன்ற உறுப்பினர்கள், சில மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து முறைகேடு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது
முறைகேடுகள் நடந்த மண்டல அலுவலகங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி 3வது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Jun 27, 2025 10:24 IST
சொத்து வரி விதிப்பில் முறைகேடு -மேலும் 3 பேர் கைது
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேட்டில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இருவர் கைதான நிலையில் கார்த்திகேயன், உசேன், ராஜேஷ் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிகளை மீறி வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. மாநகராட்சி ஆணையர் ஆய்வுக் கூட்டத்தில் முறைகேடு அம்பலமான நிலையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 2 உதவி ஆணையர்கள் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் வரி குறைப்பு முறைகேடு நடந்தது உறுதியானது
-
Jun 27, 2025 10:06 IST
கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை - வனத்துறை உத்தரவு
கொடைக்கானல், யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Jun 27, 2025 09:54 IST
ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரித்துள்ளது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65,000 கனஅடியாக அதிகரிப்பு. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
Jun 27, 2025 09:23 IST
கூமாப்பட்டி - பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்
விருதுநகர், பிளவுக்கல் பெரியாறு அணையில், பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும், திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா கூறியுள்ளார். கூமாப்பட்டியை ட்ரெண்டிங் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி, பிளவக்கல் அணை பூங்காவை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
Jun 27, 2025 09:21 IST
ஒரே நாளில் 2 அடி உயர்வு
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 5000 கன அடி; நீர்மட்டம் 135 அடி; அணையில் இருந்து விநாடிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
Jun 27, 2025 09:20 IST
ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரி உள்ளது தமிழ்நாடு அரசு. ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
-
Jun 27, 2025 09:19 IST
தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - 4வது நாளாக குளிக்கத் தடை!
தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 4வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 27, 2025 09:19 IST
இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது
திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி சுமன், அவரது நண்பர் தமிழரசன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பிரவீன், அஸ்வின் ஆகியோரை கொலை செய்ததாகவும் அவர்களுக்கு பைக் கொடுத்து உதவியதாகவும் இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
-
Jun 27, 2025 09:16 IST
நீர்வரத்து அதிகரிப்பு- ஒகேனக்கலில் குளிக்கத் தடை
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். வினாடிக்கு 57,000 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 3ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.