மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். தொண்டர்களின் உற்சாக வரவேற்பை பார்த்து தனது காரிலிருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று தொண்டர்களின் வரவேற்பை ஏற்றார்.
இன்று புதுச்சேரி, தமிழ்நாட்டில் அமித்ஷா பொது கூட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதற்கிடையே, அமித் ஷா தமிழகம் அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தது. மார்ச் 1 ம் தேதி சென்னை, கொச்சி விமான நிலையங்களில் குண்டுகள் வைக்கப்படும் என்றும், எம்ஜிஆர் ரயில் நிலையமும் தாக்குதல் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில், அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் இருவரும்அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பெற்றது ஏன்? அன்புமணி விளக்கம்
முன்னதாக, பிரதமர் நரேந்திரமோடி ஒருநாள் பயணமாக கடந்த 25ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகை தந்தார். அன்று மாலை, கோவை கொடிசியா மைதானத்தில் தமிழக பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். பின்னர், புதுச்சேரி சென்ற மோடி, அங்கு ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“