உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சில முக்கிய இடங்களில் போர்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை துறைமுக வளாகங்களில் இன்று மாலை 4 மணிக்கு இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
இந்த போர் ஒத்திகை, போர் தயார் நிலையை சரிபார்ப்பதற்கான பாதுகாப்பு பயிற்சி மட்டுமே எனவும் போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உயரதிகாரிகள், மாநில நிவாரண ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைமை இயக்குநர், ஏ.டி.ஜி.பி., சென்னை அணுமின் நிலைய அதிகாரிகள், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய வளாகத்தில் செயல்படும்.
இந்த ஒத்திகையின்போது, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட, பேரிடர் மேலாண்மை ஆணையம், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய பிற துறைகள் ஈடுபடும். இந்த 2 நிறுவல்களிலும் மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பயிற்சி நடைபெறும்.
இந்தியாவில் கடைசியாக கடந்த 1971ஆம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த ஒத்திகை நடக்கிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பணிகள் நடக்கும். இந்த ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை." என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.