கல்லூரிக்கு வராதது தொடர்பாக, பெற்றோர்களிடத்தில் புகார் தெரிவித்த விடுதி வார்டனை, மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, துறையூர் அருகே கண்ணனூரில், தனியார் வேளாண்மை கல்லூரி உள்ளது. கல்லூரி விடுதி வார்டனாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த வெங்கட்ராமன், 45, என்பவர் இருந்தார்; திருமணம் ஆகாதவர்.பெரம்பலூர், வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் அப்துல் ஹக்கீம், 19, விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு, பி.எஸ்சி., அக்ரி படித்தார். இவர், சில வாரங்களாக, கல்லூரிக்கு செல்லாமல், விடுதியில் தங்காமல் இருந்துள்ளார். இது குறித்து, மாணவரின் பெற்றோருக்கு, வார்டன் வெங்கட்ராமன், மொபைல் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், கல்லூரிக்கு வந்த அப்துல் ரசாக், மகனை திட்டியுள்ளார்.இதனால், ஆத்திரமான ஹக்கீம், நேற்று மதியம், விடுதி அறையில் இருந்த வார்டன் வெங்கட்ராமனிடம் சென்று, தந்தையிடம் புகார் கூறியது குறித்து கேட்டு, தகராறில் ஈடுபட்டார்.தொடர்ந்து, தான் கொண்டு சென்ற கத்தியால், வார்டனை சரமாரி குத்தி கொலை செய்தார். படுகாயமடைந்த வார்டன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சக மாணவர்கள், ஹக்கீமை மடக்கி பிடித்து, ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து, ஹக்கீமை கைது செய்தனர்.
கல்லூரி வளாகத்திலேயே, விடுதி வார்டனை, மாணவன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.