கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக விடுதி வார்டன் புனிதா ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் மகளிர் விடுதி வைத்து நடத்தி வந்தவர் ஜெகந்நாதன். இந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்த புனிதா மற்றும் ஜெகந்நாதனும் இணைந்து அங்கு தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறிய புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை தொடங்கியவுடன் ஜெகந்நாதனும் புனிதாவும் தலைமறைவாகினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி ஆலங்குளம் என்ற பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து ஜெகந்நாதான் சடலமாக மீட்கப்பட்டார். ஜெகந்நாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாகி இருந்த விடுதி வார்டன் புனிதா, கடந்த 1ம் தேதி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், மாணவிகளை பாலியல் அத்துமீறலுக்கு அழைக்க முயன்றதாக புனிதா வாக்குமூலம் அளித்திருக்கிறார். மாணவிகளை தவறாக வழி நடத்த, விடுதி உரிமையாளருக்கு உடந்தையாக இருந்ததை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். பணத்திற்காக இதை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விடுதி காப்பாளர் புனிதாவை ஆக.14 வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.