Advertisment

அதிர்ச்சி: பயிற்சி மருத்துவரை கத்தரிகோலால் குத்திய நோயாளி; ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை நோயாளி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
May 31, 2023 09:08 IST
RGGG Hospital

RGGG Hospital

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து நோய்க்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்த பாலாஜி (34) என்பவர் கல்லீரல் பிரச்சினை காரணமாக 2 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இங்கு பயிற்சி மருத்துவராக சூர்யா(24) உள்ளார். இந்நிலையில் நேற்று மருத்துவர் சூர்யா, பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளார்.

Advertisment

பாலாஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக கையில் ஊசி போடப்பட்டிருந்தது. இந்த ஐ.வி. ஊசியை அகற்றக் கோரி பாலாஜி மருத்துவர் சூர்யாவிடம் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க இருப்பதால் அதனை அகற்ற கூடாது என்று சூர்யா அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாலாஜி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சூர்யா அருகில் இருந்த மற்ற நோயாளிகளை பார்க்கச் சென்ற நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலை எடுத்து சூர்யாவின் கழுத்தில் பாலாஜி சரமாரியாக குத்தினார். இதில் காயமடைந்த சூர்யாவை மருத்துவமனையில் இருந்த சக மருத்துவர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்தும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் நள்ளிரவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மருத்துவமனை டீன் மருத்துவர் தேரணி ராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் பாதுகாவலர்கள் அமர்த்தப்படுவார்கள், இனி வரும் காலங்களில் மருத்துவர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தேரணி ராஜன் உறுதியளித்தார்.

மேலும் பாலாஜியை போலீசார் கைது செய்த விவரத்தையும் அவர் கூறினார். மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்து இருப்பதாகவும் அவர் எடுத்து கூறினார்.

இதையடுத்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திருப்பினர். மருத்துவர்களின் திடீர் போராட்டத்தால் சிறிது நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை பாதிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல்நிலைய போலீசார் பாலாஜி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai #Ma Subramanian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment