விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பட்டதாரிகள், கடந்த ஓராண்டாகச் சென்னையில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி வந்து உள்ளனர். பூட்டை உடைக்காமலோ அல்லது வலுக்கட்டாயமாகப் பூட்டைத் திறக்காமலோ, டெலிவரி ஊழியர்கள் போல நடித்து இந்தத் திருட்டை அரங்கேற்றி உள்ளனர்.
20 வயதுக்குட்பட்ட இந்த இருவரும், குடியிருப்புப் பகுதிகளில் உணவு டெலிவரி ஊழியர்கள் போல சென்று, வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களின் இருப்பிடம் மற்றும் மாடலை ரகசியமாகப் நோட்டமிட்டு வந்துள்ளனர். சில நாட்களுக்கு பிறகு நள்ளிரவில் வந்து, வாகனங்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
குறைந்த அளவிலான சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு காவலர்கள் இல்லாத பகுதிகளைக் குறிவைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான (ரீ-செல்லிங்) மறுவிற்பனை மதிப்பு கொண்ட இருசக்கர வாகனங்களைத் தேர்ந்தெடுத்துத் திருடியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களின் இந்த நூதன திருட்டு முறை போலீசாரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட வாகனங்களை இவர்கள் ஒரே இடத்தில் வைத்திருப்பதில்லை. மாறாக, அவற்றை பூங்காக்களுக்கு அருகிலுள்ள உட்புறப் பகுதிகள் போன்ற பொது இடங்களில் நிறுத்தி, அங்கேயே விற்பனை செய்துள்ளனர். பெரும்பாலான கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாகனங்களை விற்றுள்ளனர். அவர்களுக்கு இது திருட்டு வாகனங்கள்தான் என்பது தெரியாது.
விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான விழுப்புரத்தைச் சேர்ந்த 22 வயதான அர்ஜுன், தனது தொழில்நுட்பக் கல்வியைப் பயன்படுத்தி டிஜிட்டல் கண்காணிப்பைத் தவிர்த்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பைக்குகளில் உள்ள ஜிபிஎஸ் (GPS) பிரிவை அகற்றும் தனது அனுபவத்தை அவர் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், அவர் ரகசியமான உரையாடல் தளங்களைப் (encrypted chat platforms) பயன்படுத்தி தகவல் தொடர்புகொண்டு வாகனங்களை விற்று உள்ளார். அண்ணா நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, வில்லிவாக்கம் மற்றும் அமைந்தகரை ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த போதிலும், இந்த உத்தி சுமார் ஒரு வருடமாக அவர்கள் பிடிபடாமல் இருக்க உதவியதாகக் காவல்துறை கூறியது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அண்ணாநகரைச் சேர்ந்த 24 வயதான கபிலன், திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் ஒருபோதும் இந்த வாகனங்களை பழைய வாகன விற்பனையாளர்கள் மூலம் விற்கவில்லை. மாறாக, நேரடியாக மாணவர்களிடம் தள்ளுபடியில் விற்றுள்ளார். இந்த வாகனங்களுக்கு போலி ஆவணங்களை உருவாக்கி, அவை அசல் ஆவணங்கள் என்று உறுதி அளித்துள்ளார்.
சில வாங்குபவர்கள் பூங்காக்களுக்கு அருகில் வாகனங்களை சோதனை ஓட்டம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த வாரம் துவக்கத்தில் அண்ணாநகர் குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து, சோதனைகளின் போது 5 உயர் ரக பைக்குகளை மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த இருவரும் கடந்த ஒரு வருடமாகப் 12-க்கும் மேற்பட்ட பைக்குகளைத் திருடி விற்றது தெரியவந்துள்ளது. தற்போது, வாங்குபவர்களின் அடையாளங்களை போலீசார் சரிபார்த்து வருகின்றனர். மேலும், திருடப்பட்ட வாகனங்கள் வேறு குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: times of india