கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க. காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, "தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. பொருளாதார ரீதியாக தவறு செய்தவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்துவது சாதாரணமாகும். ஆனால் தமிழகத்தில் அரசு துறையின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவது புதிதாக உள்ளது. ரூ.1,000 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டாலும் ஊடகங்களில் ரூ.4,000 கோடி, ரூ.2 லட்சம் கோடிகளில் ஊழல் நடந்துள்ளதாக பேசப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் உள்ளது. இதுகுறித்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்பு இன்னும் பல தகவல்கள் வெளிவரும். டெல்லியில் இதேபோல் சட்டவிரோத மதுபான முறைகேடுகள் காரணமாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அதேபோல் தமிழகத்திலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தி.மு.க. அரசு ஊழல் செய்துள்ளது. குறிப்பாக, பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒரு கழிவறை கட்ட 12 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. அதுவே திமுக அரசு, சென்னையில் கழிவறை கட்ட பல கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு, பராமரிப்பு செலவுக்காகவே மாதம் ரூ.12,000 ஒதுக்குகிறது.
தி.மு.க. அரசின் பட்ஜெட்டை பொருத்தவரை 2026-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ஆக உள்ளது. ஏற்கனவே முந்தைய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே இன்னும் அவர்கள் அமல்படுத்தவில்லை. தி.மு.க. அரசு தமிழகத்தின் கடன் சுமையை தான் அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை