நான் நல்லா இருக்கேன்..ப்பா.. ஆஸ்பத்திரியில இருக்கேன்.. ரத்தம் ஏத்திட்டு இருக்காங்க" என்று உற்சாகத்துடன் சொல்கிறார் பரவை முனியம்மா.
எவ்வளவு திறமைகள் இருந்தும் வாழ்நாளெல்லாம் அறியப்படாதவர் திடீரென ஒருநாள் பார் போற்றும் அளவுக்கு உயர்ந்து விடுவார். அந்த வகையில் பரவை முனியம்மாவையும் குறிப்பிட்டு சொல்லலாம். மதுரை மாவட்டத்தில் இருக்கும் பரவை என்ற ஊரில் இருந்து வந்துள்ளதால் பரவை முனியம்மா என்று அழைக்கப்படுகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் இருக்கிறார்.
நல்ல குரல் வளம்.. நன்றாக பாடுவார்.. காமெடி நடிகையும்கூட.. பல படங்களில் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதைதவிர, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல்களை பாடி அசத்தியவர். இவருக்கு சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சனைகள் இருந்து வந்தது. சில தினங்களாக இவரை பற்றின வதந்திகளும் பரவி வந்து கொண்டுள்ளன. இன்றும் அப்படி ஒரு வதந்தி பரவியது.
பரவை முனியம்மாவின் உடல்நிலை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. "பரவை முனியம்மா அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களால் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை மூலம் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார். அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று சிகிச்சை அளிக்கிறது" என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நடிகர் அபி சரவணன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தான் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.