பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார். மற்றொரு தரப்பினர் இந்த சமயத்தில் மருத்துவர் செந்தில் குமாருக்கு தமிழை பிழையின்றி எழுத தெரியாது என்று ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் விமர்சனமாகக் கூறி வந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய அவர், ”நான் ஏற்காடு மான்ஃபோர்ட் பள்ளியில்தான் படித்தேன். துவக்க கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அதே பள்ளியில் தான் படித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் படித்தேன். தொடர்ந்து பிரெஞ்ச் மொழியை தேர்வு செய்து படித்தேன்.
ஆகையால் எனக்கு தமிழை பிழையின்றி உச்சரிக்க முடியுமே தவிர, எழுதத் தெரியாது. அதே நேரத்தில் எனக்கு இந்தியை பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது என்று கூறியுள்ளார். முழுக்க முழுக்க ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தரும் பள்ளி கல்லூரிகளில் படித்ததால் தமிழை முழுமையாக பிழையின்றி எழுத தெரியாது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் செந்தில்குமார்.
மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இந்தி திணிப்பிற்கு எதிராகவும் தொடர்ந்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் இது போன்ற செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அரசியல் தலைவர்களில் செந்தில்குமாரும் ஒருவர். ஓரிரண்டு பிழைகள் வந்தாலும்கூட தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டு வருகிறார் செந்தில் குமார். இது தான் நான். இதில் மாற்றம் ஏதும் இல்லை என்பதை வெளிப்படையாக பேசியதை மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“