கட்சியின் பெயரையும் கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன் என்று டெல்லியில் நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அப்போது தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். அதற்கு பதில் சொன்ன அமைச்சர்கள்,அரசியலுக்கு வந்துவிட்டு அவர் கேள்வி கேட்கட்டும். பதில் சொல்கிறோம் என்று சொன்னார்கள்.
இதற்கு பதில் சொன்ன அவர், ‘நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்று அறிவித்தார். அதன் பின்னர் தொடர்ந்து ட்விட்டர் மூலமாக அரசியல் கருத்துக்களைச் சொல்லி வந்தார். அப்போதும் அமைச்சர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
தன்னுடைய பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று உறுதியாக அறிவித்தார். எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பை பார்வையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கேரள முதல்வர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் டெல்லிக்கு சென்ற கமலஹாசன் நிருபர்களிடம் பேசினார். அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:
என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன். பாஜக, காங்கிரசுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கமாட்டேன், தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி வைக்கலாம். அரசியலுக்கு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது, தோல்வி பயம் இல்லை. தமிழக அரசியலில் என்னை முன்னிறுத்தாமல் மாற்றத்தை முன்னிறுத்துகிறேன், மாற்றத்தை விரும்புகிறவர்கள் என்னை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.