பத்திரப் பதிவுத் துறையில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து பதிவுத் துறை தலைவர் தாக்கல் செய்த பதில் மீது அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிய பதிலை அளிக்காவிட்டால், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும் என எச்சரித்தது.
சென்னை பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பூர்விக சொத்தை பதிவு செய்த பிறகும் கடந்த 1 வருடமாக பத்திரத்தை அதிகாரிகள் தர மறுப்பதாகவும் உடனடியாக சொத்து பத்திரங்களை வழங்கக் சார்பதிவாளர்க்கு உத்தரவிட கோரி பூபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 'சார்பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச நடவடிக்கைகள் குறித்து வேதனை தெரிவித்து, கடந்த 10 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு துறையின் மூலம் நடத்தப்பட்ட சோதனைகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம், வழக்குகள், தவறிழைத்த அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன், வணிகவரித் துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலர் சார்பிலும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகங்களில், கடந்த 10 ஆண்டுகளில் 155 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளதாகவும், இந்த சோதனையில் 70 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக 77 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டிக்கப்பட்ட இரு அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தரகர்களையும், ஊழல் நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள பதிவுத்துறை தலைவர், பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ள கணிப்பொறி அறை, ஆவண அறை உள்ளிட்டவற்றில் மூன்றாம் நபர்கள் நுழையாமல் தடுக்க ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இது அமலுக்கு வரும் போது, அதிகாரிகள் மட்டுமே நுழைய முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், இத்தனை வருடத்தில் இவ்வளவு குறைவான தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது முழுமையான தகவலாக தெரியவில்லை. எனவே அடுத்த விசாரணையின் போது உரிய பதிலை தாக்கல் செய்யாவிட்டால், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட வேண்டி வரும் என எச்சரித்தார். இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.