சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, பொன். மாணிக்கவேல் பதவி காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்தது உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் ஐ.ஜி. பொன்.மணிக்கவேல் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு அரசாணை மூலம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக, அரசாணை வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டினர். இந்த விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது.
பொன். மாணிக்கவேல் பதவி காலம் நீட்டிப்பு
இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்தது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ-யிடம் அனுமதி பெறாமல் அரசாணை பிறபித்தது ஏன் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இன்று ஓய்வு பெற இருந்த பொன் மாணிக்கவேலின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அவர் சிறப்பு அதிகாரியாக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுகிறார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் போலீஸ் ஏ.டி.ஜி.பி-யாக அபய்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பொன். மாணிக்கவேல் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அபய் குமார் சிங் நியமனம் முறையற்றது
சென்னை உயர் நீதிமன்றம் மேலும் அபய் குமார் சிங் நியமனமானது முறையற்றது என்றும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி, பொன். மாணிக்கவேலையோ அல்லது அவரின் கீழ் பணியாற்றுபவர்களையோ வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அரசிற்கு உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.