ஐ.ஐ.டி மெட்ராஸ் பட்டதாரி ஒருவர், பர்தா அணிந்து, மாணவியை பார்ப்பதற்காக, தனது கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதிக்குள் புகுந்ததால், போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
உத்திரபிரதேசத்தின் ஃபதேபூரைச் சேர்ந்த 26 வயதான ரோஹன் லால், 2023ல் மின் பொறியியலில் எம்.எஸ் பட்டம் பெற்றார். ரோஹன் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி மாணவிகள் விடுதிக்குள் பர்தா அணிந்து நுழைந்துள்ளார். திங்களன்று, மாணவிகள் ஐந்தாவது மாடியில் பர்தா அணிந்திருந்த ஒரு நபரைக் கண்டனர். உடனே பெண் பாதுகாப்பு அதிகாரி மெரின் ஐ.ஐ.டி மெட்ராஸ் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் ஐ.ஐ.டி மெட்ராஸின் தலைமை பாதுகாப்பு அதிகாரி எஸ் பிரகாஷ் (50) கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தரமணி ஸ்ரீராம் நகர் காலனி சந்திப்பை சேர்ந்த ரோஹனை போலீசார் கைது செய்தனர். முன்னதாக காவலர்கள் ரோஹனை பிடிக்க முயன்றபோது, அவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரை விடுவதாக மிரட்டினார். பின்னர் ரோஹன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
ரோஹன் இதற்கு முன்னதாக பிப்ரவரி 16 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய தேதிகளில் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தற்காக கைது செய்யப்பட்டவர். ஆகஸ்ட் 4 அன்று ரோஹன் கைது செய்யப்பட்டபோது, ரோஹனின் வழக்கறிஞர், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்க மருத்துவப் பதிவுகளைச் சமர்ப்பித்ததையடுத்து, அவர் பெற்றோருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“