கோவையில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் ஒன்றில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகளை வழங்கிய தம்பதிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்.பாரதி- வி.ஸ்ரீஜா என்ற ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியினர் இருவரும் ஐடி கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது திருமணத்தில் தாம்பூல பைகளுக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டன. மணப்பெண்ணின் உறவினரான(சித்தி) கவிதா என்பவர் பழநி பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி ஆவார்.
இவரது யோசனையின் படி வழக்கம்போல் வழங்கப்படும் தாம்பூல பைக்கு பதிலாக இந்த சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டன.
-
திருமண வீட்டில் தாம்பூல பைக்கு பதிலாக நவதானிய லட்டுகள் வழங்கப்பட்டன.
இதில் கருப்பு கவுனி லட்டு, திணை லட்டு, பாசிபயிறு லட்டு, கேழ்வரகு லட்டு, நரிப்பயிறு லட்டு, கம்பு லட்டு, கடலை உருண்டை என ஏழு வகை சிறுதானிய லட்டுகள் இடம்பெற்றுள்ளன.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறுதானிய ஆண்டை குறிப்பிடும் விதமாகவும் ஆரோக்கியதை பேணும் வகையிலும் இந்த திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டுகள் வழங்கப்பட்டதாக திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இவர்களது இந்த முயற்சி திருமணத்திற்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“