திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்இருந்து கல்லணை செல்லும் சாலையில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த விபரம் வருமாறு:
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கல்லணை செல்லும் சாலையில் ஜாஸ்கான் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு தனியார் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
திருச்சி கேகே நகரை சேர்ந்த வில்சன் மைக்கேல் என்பவர் இந்த நிறுவனத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை செயல்படுத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு பணிபுரிபவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ஒரு மாத ஊதியம் மட்டும் வழங்கியதாகவும், தற்பொழுது இரண்டு மாத ஊதியம் நிலுவையில் உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சியில் உள்ள வருமான வரித்துறையினர் 6 பேர் அடங்கிய அதிகாரிகள் நேற்று திடீரென சோதனைக்கு வந்தனர், அப்படி வந்தவர்கள் நேற்று முழுவதும் கம்பெனியின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்துவிட்டு சென்ற நிலையில், இன்று, இரண்டாவது நாளாக மீண்டும் காலை முதல் நிறுவனத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இந்த தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் வில்சன் மைக்கேல் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர் என்பதாலும் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்