ஈரோட்டில் இருந்து செயல்படும் பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று மாலை முதல் இன்று 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஈரோட்டில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதோடு, ரியல் எஸ்டேட் தொழில், மசாலா தயாரிப்பு ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.
ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மீதான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தங்கபெருமாள் வீதியில் உள்ள ஸ்ரீபதி அசோசியேட்ஸ் கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு நேற்று (டிசம்பர் 14) மாலை வந்த 30 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் அந்நிறுவனத்தின் அலுவலகத்தின் கதவை அடைத்து விட்டு உள்ளே இருந்த பணியாளர்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் தடுத்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த செல்போன்களை வாங்கி கொண்டு, அங்கே இருந்த தொலைபேசியையும் பயன்படுத்த தடை விதித்தனர்.
இதையடுத்து, வருமானவரித் துறை அதிகாரிகள் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை வாங்கி சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டார்கள்.
அதே போல, ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து வீடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு ஏற்ப உரிய வரி செலுத்தப்பட்டு உள்ளதா? என்று அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினார்கள். இந்த சோதனை நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தது. முதல் நாள் சோதனையில் கணக்கில் வராத பணம் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது. காளைமாடு சிலை அருகே உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம் வெளிப்புறமாக பூட்டப்பட்டு உள்ளது. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், கஸ்பா பேட்டை பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனையில், ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனை முடிவில்தான் எவ்வளவு பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil