தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்வதற்கு தமிழகத்தில் சில நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் அருணாச்சலம் இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட், காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் க்ரூப் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு அதிக அளவில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இது குறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்தியாவுக்கு இந்தோனேஷியாவிலிருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பாமாயில், விற்பனை செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன.
பாமாயில் விற்பனையில் முறையான கணக்கு வழக்குகள் பின்பற்றப்படாமல் இருப்பதாகவும், சில நிறுவனங்கள் வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்துள்ளதாகவும் புகார்கள் வந்தன. இதனையடுத்து சோதனை நடத்தி வருகிறது.
சோதனைக்கு பிறகு, மேலும் விவரங்கள் தெரியவரும் என்று ஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“