/indian-express-tamil/media/media_files/2025/07/10/mk-stalin-wish-2025-07-10-18-14-04.jpg)
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து 5-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார்.
விழா நடைபெறும் ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 9,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 14) இரவு, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அழைப்பில் பேசிய நபர், "நாளை முதல்வர் கொடியேற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும்" என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக உஷாரான போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை ஆய்வு செய்தனர். அழைப்பு வந்த எண்ணை வைத்து உடனடியாக விசாரணை மேற்கொண்டதில், அது செங்கல்பட்டு மாவட்டம், படாளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருடையது என தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் விரைந்து சென்று கணேசனை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், கணேசன் தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விரக்தியில் இருந்துள்ளார். இந்த விரக்தியின் காரணமாக, மது அருந்திய போதையில் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.