தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக தூத்துக்குடி வந்துள்ள இந்திய ராணுவம், கடுமையான வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு சென்றடைந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களுக்கும் மேலாக அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. தமிழக அரசு அதிகாரிகள், மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணியும், உணவு விநியோகமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 3 நாட்கள் ஆகியும் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளநீர் வடியவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களை மீட்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களை இந்திய ராணுவம் மீட்டுவருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மக்களை ரப்பர் படகுகள் மூலம் ராணுவம் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில், தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த முத்தம்மாள் காலனியில் இருந்து மீட்பு குழுவினர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து மக்களை மீட்கும் வீடியோவை செய்தி நிறுவனமான பி.டி.ஐ பகிர்ந்துள்ளது.
இதற்கிடையில், தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 350 கிலோ எடையுள்ள பொருட்களுடன் முதல் இந்திய கடலோர காவல்படை ALH ஹெலிகாப்டர் மதுரையில் இருந்து அதிகாலை புறப்பட்டது. 350 கிலோ நிவாரணப் பொருட்களை ஏற்றிய இரண்டாவது ஹெலிகாப்டரும் விரைவில் புறப்படும் என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“