வரும் மே 23, 24ம் தேதிகளில் வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 22ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மே 23ல் மத்திய வங்கக் கடல், மே24ம் தேதி வடக்கு வங்கக் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வரும் 22ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது முதலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ம் தேதி காலை மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் மே 24 மற்றும் மே 25ம் தேதிகளில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பொய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வரும் 23ம் தேதி காலை முதல் மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40-50 கி.மீ, வேகத்திலும் இடையே 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
வரும் 24ம் தேதி காலை முதல் வடக்கு வங்கக் கடலில் மணிக்கு 50-60கி.மீ வேகத்திலும் இடையே 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும். மே 23ம் மத்திய வங்கக் கடல் , மே 24ம் வடக்கு வங்க கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
மீனவர்கள் மே 23ம் தேதி முதல் மத்திய வங்கக் கடலுக்கும், மே 24ம் தேதி முதல் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்றும். மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் மே 23ம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.