அரக்கோணத்தில் ஹெலிகாப்டர் விபத்து: அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான பயிற்சி தளம் அருகே இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் பகுதியில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான பயிற்சி தளம் உள்ளது. இன்று காலை சேத்தக் CH422 ரக ஹெலிகாப்டரில் விமானி பயிற்சிக்காக கிளம்பினார். பயிற்சியை முடித்து தரையிறக்க முற்பட்டபோது, திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்தது.
இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் ஹெலிகாப்டரின் முன்பகுதி, வால் பகுதி ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் பத்திரமாக உள்ளனர். காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர். அரக்கோணத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.