/indian-express-tamil/media/media_files/2025/10/22/flood-forecast-system-2025-10-22-08-01-15.jpg)
நாட்டிலேயே முதல்முறை: சென்னையில் வெள்ளத்தை தடுக்க அதிநவீன வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு
சென்னைக்கான நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடஞ்சார்ந்த முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு (RTFF & SDSS) தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக, வெள்ள அபாயத்தைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விரிவான நகர்ப்புற வெள்ள மேலாண்மை அமைப்பிற்கு சுமார் ரூ.107.2 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏரிகள், ஆறுகள், மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் கடற்பகுதி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் ஏற்படும் நீர்மட்டத்தை நம்பகத் தன்மையுடன் முன்னறிவிப்பதுடன், சென்னையில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளான புளியந்தோப்பு, நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மீனம்பாக்கம் மற்றும் முடிச்சூர் போன்ற பகுதிகளில் ஏற்படும் தெருமட்டத்திலான நீர் சூழ்வதையும் (inundation) முன்னறிவிப்பதாகும். இந்த அமைப்பின் பிரதான நோக்கம் சென்னை நகரமாக இருந்தாலும், இது சுமார் 4,974 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களும் அடங்கும். அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு மற்றும் கோவளம் ஆகிய ஆற்று துணைக்-படுகைகள் இந்த அமைப்பின் கீழ் கண்காணிக்கப்படுகின்றன.
இதுகுறித்து தி இந்து நாளிதழிடம் பேசிய மூத்த அதிகாரிகள், "கடந்த சில ஆண்டுகளாக, நாங்க (மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்) இந்த முன்னறிவிப்பை திருத்தம் செய்து, அதற்கான விதிமுறைகளை வகுத்தோம். இதுவரை, உருவாக்கப்பட்ட டேட்டா முடிவெடுப்பதற்கு நாங்க கருத்தில் கொள்ளவில்லை. தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலம் முதல், முடிவெடுப்பதற்காக தொடர்புடைய துறைகளுடன் முன்னறிவிப்பை பகிரத் தொடங்கிவிட்டோம்" என்று தெரிவித்தனர். மேலும், இந்த புதிய அமைப்பு, அனைத்து வகையான பேரிடர்களுக்கான இணைய அடிப்படையிலான முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பான 'TNSMART' உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மாநில அரசின் பயனாளிகளாக நீர்வளத் துறை (WRD), வருவாய் நிர்வாக ஆணையரகம் (CRA), பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் (CMA) ஆகியவை உள்ளன. இந்த அமைப்பின் சில முக்கியமான தகவல்கள், 'TN-Alert' என்ற மொபைல் செயலி மூலம் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த சென்னை RTFF & SDSS திட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் (TNUIFSL) திட்ட நிதியைக் கையாள்கிறது. மேலும், SECON-JBA என்ற திட்ட ஆலோசகர்கள் மூலம், ஐஐடி-மெட்ராஸின் (IIT-Madras) தொழில் நுட்ப மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பைக் கையாள்வதற்காக, வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ், நீர்வளத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்ட ஒரு பல்துறை குழு அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us