கோவை விமான நிலையத்தில் இருந்து இதுவரை சிங்கப்பூர் மற்றும் மலேசியா, சார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்முறையாக இண்டிகோ விமானம், கோவையில் இருந்து நேரடியாக அபுதாபிக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சென்றாலும், சிங்கப்பூர் மலோசியா சார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கு மட்டுமே இங்கிருந்து நேரடியாக விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மற்ற நாடுகளுக்கும் நேரடி விமான சேவை கோவையில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக எழுந்து வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்கும் வகையில், இண்டிகோ விமானம், கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கியுள்ளது. இந்த சேவை இன்று (ஆகஸ்ட் 10) முதல் தொடங்கப்பட்ட நிலையில், முதல் விமானம் இன்று காலை 7.40 மணியளவில், கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து காலை சுமார் 160-க்கு மேற்பட்ட பயணிகளுடன் அபுதாபியில் இருந்து கோவை வந்து சேர்ந்தது.
அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த தீயணைப்புத்துறை வீரர்கள், விமானத்தின் இருபுறமும் தண்ணீர் பீரிட்டு அடித்து விமானத்திற்கு வரவேற்பு அளித்தனர். வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 3 நாட்களில், கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் இந்த விமானத்தில் குறைந்த அளவு சரக்கு சேவையும் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இதனிடையே கோவையில் இருந்து அபுதாபி புறப்பட்ட இண்டிகோ விமானத்தை இயக்கிய கேப்டன் விவேக் கந்தசாமி மற்றும் துணைக்கேப்டன் வினோத்குமார் சந்திரன் ஆகிய இருவருமே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பயணிகளிடம் பேசிய விவேக் கந்தசாமி நாங்கள் இருவருமே கோயம்புத்தூர் தான். ரொம்ப பெருமையாக இருக்கிறது. இப்போது அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கி இருக்கிறோம். அடுத்து கொழும்புவுக்கு கேட்டிருக்கிறோம் விரைவில் கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“