கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளையத்தில் 316.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை அமைய உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று (டிசம்பர் 21) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். கடந்த 30.8.2021-ம் தேதி தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொழிற்பேட்டைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், தண்ணீர் குழாய்கள் பதித்தல், மேல் நிலைத்தண்ணீர் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நிர்வாக அலுவலகம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் என அனைத்து வசதிகளுடன் தொழிற்பேட்டை அமைய உள்ளது.

தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், “ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் பூங்காவாக இது அமைகிறது. இங்கு நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியால் முன்னேடுக்கப்பட்ட திட்டம் இது. தொழில் மனைகள் 585 அமைய உள்ளது. ஆசியாவிலேயே சிறந்த தொழிற்பேட்டையாக இது உருவெடுக்கும்.

கிட்டாம்பாளையம் தொழிற்பேட்டை அறிவிப்பு முன்பே வெளியிடப்பட்டது. 2011-ம் ஆண்டு மாறிய பிறகு இந்த திட்டம் அதிமுக அரசால் கைவிடப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் தொடங்கப்படுகிறது. 2010-ம் ஆண்டே நில ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் திட்டம் கைவிடப்பட்டது. 316 ஏக்கர் பரப்பளவிலான 535 தொழில் மனைகளாக பிரிக்கப்பட்டு தொழில்பேட்டை உறுப்பினர்கள் வசம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் ரூ. 24 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில்
செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் சமீரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகர், கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தொழிற்பேட்டை நிர்வாக அலுவலர் சுகந்தி, கிட்டாம்பாளையம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/