/indian-express-tamil/media/media_files/2025/07/05/industrial-bodies-2025-07-05-09-18-24.jpg)
மின் கட்டண உயர்வு வரம்பு: 112 கிலோ வாட்டாக உயர்த்த தொழில் அமைப்புகள் கோரிக்கை
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி முதலமைச்சரை சந்தித்து முறையீட தொழில் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. கோவை அண்ணா சிலை அருகே கொடிசியா அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, டேக்ட், கோப்மா, கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது;
"ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின்கட்டணம் மற்றும் நிலைக்கட்டணம் காரணமாக தொழில்களை நடத்த முடியாத நிலை உள்ளது. மின்கட்டண உயர்வு காரணமாக உற்பத்தி செலவுகள் அதிகரிக்கிறது. மின் நிலைக்கட்டணம் 450% வரை உயர்த்தி இருப்பதால், கடந்த 3 ஆண்டுகளில் 10% வரை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மின்கட்டண உயர்த்தப்படுவதை விட, மின் நிலைக்கட்டணம் ஒரேயடியாக உயர்த்தியதே தொழில் முடக்கத்திற்கு காரணம். மின்கட்டண உயர்வு மற்றும் மின் நிலைக்கட்டணத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தின் தலைவர் பிரதீப் கூறியதாவது; ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்துவது தொழில் துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது. சோலார் மேற்கூரைக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோலார் மேற்கூரை அமைக்க அரசு 25% மானியம் வழங்க வேண்டும் என்றார்.
டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது; குறுந்தொழில்கள் நிறைந்த கோவை மாவட்டத்தில் மின் கட்டணம் மற்றும் மின் நிலைக்கட்டண உயர்வு காரணமாக தொழில்கள் பெரும் நெருக்கடியில் உள்ளன. அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 கிலோ வாட் வரை கட்டண உயர்வு இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 112 கிலோ வாட் வரை பயன்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் அதிகம் என்பதால், பயனளிக்காது. மின் கட்டண உயர்வை விலக்கை 112 கிலோ வாட்டாக உயர்த்த வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.
கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர் நலச்சங்க தலைவர் திருமலை ரவி கூறியதாவது; வாடகை, மின்கட்டணம், சம்பளம், மூலப்பொருட்கள் விலை உள்ளிட்டவை உயர்வு காரணமாக கிரில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25% வரையிலான கிரில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. 5,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மின் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையை பாதுகாக்கப்பட்ட தொழில் மண்டலமாக அறிவித்து தொழில் துறையினருக்கு சலுகைகளை வழங்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.