/indian-express-tamil/media/media_files/2025/09/15/coimbatore-infant-found-dead-2025-09-15-18-58-56.jpg)
ரயில்வே தண்டவாளத்தில் ஆண் குழந்தை சடலம்: நரபலியா? போத்தனூர் போலீசார் தீவிர விசாரணை
கோவை இருகூர், ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளத்தில் ஒன்றரை மாத ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது காதல் விவகாரத்தால் ஏற்பட்டதா என்பது குறித்து போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் குழந்தை சடலம் கிடப்பது குறித்துத் தகவல் அறிந்த போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் உடல் கிடந்த இடத்தில், எலுமிச்சை, மஞ்சள், குங்குமம் மற்றும் வெட்டப்பட்ட கோழியின் ரத்தம் படிந்த உடல் ஆகியவை கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் அப்பகுதியில் வேகமாகப் பரவியது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கூறுகையில், “ஒன்றரை மாதக் குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரயிலில் பயணம் செய்தபோது குழந்தை தவறி விழுந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நரபலி கொடுக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், அதற்கான எந்த அடையாளங்களும் குழந்தையின் உடலில் இல்லை. அந்தப் பகுதியில் நரபலி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்காக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது, ஆனால் யாரையும் அடையாளம் காட்டவில்லை. குழந்தையின் மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.