சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் ரஜினியின் அரசியல் பயணம் பற்றி எழுந்த கேள்விக்கு, ‘அறைக்குள்ளே அரசியல் நடத்தும் அரசியல் ஞானி’ என்று விமர்சித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் காவிரி விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். மேலும் பாஜக-வுடன் கூட்டணியும் நட்பும் இல்லை என்பது அதிமுக-வின் நிலைப்பாடு என்றும் யூகங்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
பின்னர், நடிகர் ரஜினி நேற்று ரசிகர்களுடன் உரையாடியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு, “அறைக்குள் அரசியல் நடத்தும் அரசியல் ஞானி ரஜினி. ஆன்மீக அரசியல்வாதி.” என்று விமர்சனம் செய்தார். மேலும் அண்ணா வழியிலும் எம்.ஜி.ஆர் வழியிலும் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்தார் என்றார். மாணவர்களுக்கும், ஏழை ஏளிய மக்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்று பதிலளித்தார்.